06:37
0

பறவைகள் வானத்தில் பறந்துகொண்டு தூங்கும் திறன் கொண்டது என ஜேர்மன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.

பவேரியா மாகாணத்தில் உள்ள Max Planck என்ற ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தான் முதன் முதலாக இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

வானத்தில் பறக்கும்போது பறவைகள் ஒரு கண்ணை திறந்துகொண்டு மறுகண்ணால் தூங்கும் திறன் கொண்டது என ஆரம்பத்தில் கருதப்பட்டது. எனினும், இதனை நிரூபிக்கவில்லை.

இந்நிலையில், Galapagos தீவில் அதிகமாக உள்ள frigatebirds என்ற வகை பறவைகள் குறித்து ஜேர்மன் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதே இனத்தை சேர்ந்த ஒரு பெண் பறவையின் தலையில் அதிநவீன கருவி ஒன்றை பொருத்தி வானத்தில் பறக்க விட்டு 10 நாட்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதில், பறவையின் அசைவுகள் மற்றும் மூளையின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு தகவலும் கருவியில் பதிவானது.

இதன் முடிவில், நிலத்திற்கு மேல் பறப்பதை விட கடலுக்கு மேல் பறக்கும்போது இப்பறவைகள் தூங்குவது தெரியவந்துள்ளது.

இவ்வகை பறவைகள் மாதக்கணக்கில் பயணம் மேற்கொள்பவை. இதன் அடிப்படையில், ஒவ்வொரு நாளும் சுமார் 42 நிமிடங்கள் இப்பறவைகள் பறக்கும்போது தூங்குகின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும், நிலத்தில் இருக்கும்போது இப்பறவைகள் நாள் ஒன்றிற்கு 12 மணி நேரம் தூங்குகின்றன. ஆனால், வானத்தில் பறக்கும்போது மட்டும் ஏன் 42 நிமிடங்கள் மட்டும் தூங்குகின்றன என்பது இதுவரை தெரியவரவில்லை.

வானத்தில் பறக்கும்போது பறவைகள் தூங்குமா என்ற நீண்ட கால ஆராய்ச்சிக்கு தற்போது ஜேர்மன் ஆராய்ச்சியாளர்கள் மூலம் பதில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment